30th Year Remembrance
Late Ilaveni Aathirupasingam
Date of Birth: 03 May 1970 - Deceased: 10 August 1993
இளவேணில் மட்டும் ஏனோ எம் வளவில் இதமில்லையே இன்றுவரை நீயின்றி.
அறம் புதைந்த ஆக்கிரமிப்பான் ஆட்சிதந்த,
திறந்தவெளிச் சிறை தாண்ட,
எழுந்த அந்த கிளாலி கடலேரி,
துணிந்த பயணமதில்,
தொலைந்த சொந்தங்கள் பலபேரில்,
கலையாத உன்முகமே எம்
கண்முன்னே விரியுதம்மா!
உரக்கக் குரலெடுத்து ஊர் அவலம் உலகறிய,
உயர் கல்வி தேவையென உளம் தாங்கி,
அரக்கர் கையில் அகப்படாமல்,
அறிவுக்கடல் நீந்தவென,
தெரிவு வழி வேறின்றி,
பிரிவுச்சுமை தாங்கி,
கையசைத்த உனை,
காலளவு நீரினிலே,
காலமது தொலைத்த நிலை,
கனவுகளில் நீங்காமல் ஆடுதம்மா!
கோடைவரும் நேரம்,
புலவில் புள்ளினங்கள் உலவும் சத்தம் இங்கு கேட்கிறது.
நிலவு வந்து நித்தம் எம் வளவில் ஒளிர்வது தெரிகிறது.
மாரிமழை பெய்து இங்கு மண்ணை நனைக்க மனம் மகிழ்கிறது.
இளவேணில் மட்டும் ஏனோ எம் வளவில் இதமில்லையே இன்றுவரை நீயின்றி.
மறுபிறப்புக் கிடைத்திருக்கும்,
மறுபடியும் பிறந்திருப்பாய்,
புண்ணியரின்
புதுமடியில்.
விண்ணேறும் தருணத்தில் நிறைவேறா உன்
வண்ணக் கனவுகளை மீண்டும் இந்த
மண்ணகத்தில் கோலமிடு.
எங்கிருந்தாலும் வாழ்க எங்கள் இளவேணிலே.!
www.tamilthakaval.org
